கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சுவிஸ் தூதரக பெண் அதிகாரி பொலிஸில் ஆஜராகி வாக்குமூலம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகம் அருகே இன்று உண்ணாவிரதப் போராட்டதில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் அஜித் பிரசன்ன தனது உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று இரவுடன் கைவிட்டார்.
அத்துரலிய ரத்ன தேரர் மற்றும் ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரி சரத் வீரசேகர ஆகியோரின் தலையீட்டை அடுத்து அவரது போராட்டம் கைவிடப்பட்டது.
சுவிஸ் தூதரக ஊழியர் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இலங்கைக்கான சுவிஸ் தூதரகம் வெளியிட்டுள்ள தகவல்கள் ஒன்றுக்கொன்று முரண்பட்டவையாக இருப்பதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு நேற்று தெரிவித்திருந்தது.
வெளியுறவுத்துறை செயலாளர் ரவிநாத ஆர்யசின்ஹா மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஓய்வு நிலை மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன மற்றும் தொடர்புடைய அதிகாரிகள் நேற்று மாலை சுவிஸ் தூதர் ஹான்ஸ்பீட்டர் மோக்கை சந்தித்து குற்றச்சாட்டு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட குற்றப் புலனாய்வுத் துறையின் விசாரணை முடிவுகள் குறித்து விளக்கமளித்தனர்.
கடத்தப்பட்ட ஊழியர் பொலிஸில் வாக்குமூலம் வழங்க வேண்டுமெனவும் இலங்கை வெளிவிவகார அமைச்சு கோரியிருந்தது.
இந்நிலையில் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் தூதரக பெண் அதிகாரி பொலிஸில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி தாய் நாட்டுக்கான போர் வீரர்கள் என்ற பெயரிலான அமைப்பின் ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் அஜித் பிரசன்னா கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகம் முன்பாக இன்று காலை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.